ஸ்ரீ ரமண மகரிஷி

குரு என்பவர் உடலல்ல, நான் என்பது மனம் அல்ல, புத்தி அல்ல, அவரின் உடம்பு அல்ல என்று பலமுறை சொல்லிக் கொடுக்கப் பட்டிருந்தாலும், அவையெல்லாம் அந்தக் கணம் மேலெழாமல், அவருடைய இழப்பு மட்டுமே பக்தர்களை உலுக்கிக் கொண்டிருந்தது.

மெள்ள மெள்ள அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப, அந்த துக்கத்திலிருந்து மீண்டு எழுந்தார்கள். அட, இது எல்லோருக்கும் நடக்கப் போகிறது. நிச்சயம் ஒவ்வொருவரும் மரணமடையப் போகிறோம். இந்த மாதிரியான ஒரு நேரம் இங்கு உள்ள அனைவருக்கும் உண்டு. தொடர்ந்து இந்த மரணம் ஜனங்களுக்கு ஏற்படத்தான் செய்யும். இந்த மரணம் கண்டு தவிப்பது என்பது தேவையில்லை. 'நான்’ மரணமடையக்கூடிய விஷயமல்ல; 'நான்’ அதைவிடப் பெரியவன். மிகப் பெரிய சக்தி. என் ஆன்ம சக்தி என்பதை நான் பார்த்துவிட்டால் இதெல்லாம் விஷயமே இல்லை. இதைத்தான் எனக்கு என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்று மனம் தேறினார்கள்.

தொடர்ந்து எல்லா வேலைகளும் மளமளவென்று நிறைவேறின. திருவண்ணாமலை மக்கள் சாரி சாரியாக வந்து பகவான் ஸ்ரீரமணரை தரிசித்தார்கள். மறுநாள் காலையில் நல்ல முறையில், பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் உடல் ஒரு குழியில் இறக்கப்பட்டு விபூதி, செங்கற்பொடி, மஞ்சற்பொடி போன்றவை போடப்பட்டு, பெரிய பாறாங்கல் வைத்து மூடப்பட்டு, அதன் மீது சிவலிங்கமும் வைக்கப்பட்டது.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி இல்லாதது போலவும் இருந்தது; இருப்பது போலவும் இருந்தது. இதுவரை அவரோடு பேசிப் பழகியவற்றை, அவர் சொன்னவற்றை நினைவுபடுத்தி, அவரை மறுபடியும் பக்தர்கள் அனுபவிக்கத் தொடங்கினார்கள். நினைவிலிருந்து தூண்டி எடுத்து அவருடைய உணர்வை மீண்டும் அனுபவித்தார்கள். அவர் இருப்பை மறுபடியும் கொண்டாடினார்கள்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்கிற உடல் ஓய்ந்து போயிற்று. ஆனால், மிக மோசமான ஒரு காலகட்டத்தில், இந்துமத தத்துவம் க்ஷீணமடைந்த தருணத்தில், எது சரியான வழி என்று தெரியாமல் ஜனங்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில், 'உன்னை நீ அறிவதே கடவுளை அறியும் வழி! இதற்காகவே பக்தி, இதற்காகவே மதம், இதற்காகவே வழிபாடு, இதற்காகவே எல்லாவிதமான வேலைகளும் இங்கு நடைபெறுகின்றன. உன்னை நீ அறிவதற்காகவே நீ குடும்பஸ்தனாய், துறவியாய், பிரம்மசாரியாய் இருக்கிறாய். உனது எல்லா முயற்சிகளும் நீ யார் என்பதை அறிவதற்காகவே இங்கு இருக்கின்றன.

எனவே, நீ யார் என்பதைத் தேடுவதை விட்டுவிட்டு, அதைத் தெரிவதைப் புறக்கணித்துவிட்டு, நீ செய்கிற மற்ற காரியங்களில் உன்னை முதன்மைப்படுத்திக் கொள் ளாதே. எல்லாக் காரியங்களிலும் நீ யார் என்று தேடு!’ என்கிற அவருடைய செய்தி உலகமெங்கும் மெள்ள மெள்ளப் பரவிச் சுற்றிக்கொண்டிருக்கிறது.



நிரஞ்சனா சுவாமிகளின் பூர்வாஸ்ரம மகன் வெங்கட் ராமன் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய, சமாதி வேலைகள் விரைவாக நடந்தன.

இன்று ரமணாஸ்ரமம், உலகில் இருக்கிற பல ஆன்மிக அன்பர்களின் தாபத்தைத் தீர்க்கிற அற்புதமான இடமாக இருக்கிறது. மிக அமைதியாய், அடக்கமாய், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, பகவான் ஸ்ரீரமணரின் செய்தியைப் பரப்புகின்ற உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.



இடைவிடாது அன்னதானமும் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீரமணருடைய இருப்பு அந்த இடத்தில் நிரந்தரமாக இருக்கிறது. அவருடைய அனுக்கிரகம் வெள்ளம்போலப் பாய்ந்து, அங்கு வருகிற பக்தர்களின் உள்ளத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பொருளாதாரத் தேவை அதிகரித்து, போட்டியும் பொறாமையுமாய் இருக்கிற இந்த வாழ்வில், அவருடைய வாக்கியங்கள் மலரைப் போல நம் நெஞ்சைத் தொட்டு ஆசுவாசப்படுத்துகின்றன. இதுவல்லவே என் வாழ்க்கை என்று ஆர்ப்பாட்டங்களிலிருந்து விடுபட்டு, அமைதியை நோக்கித் திரும்ப, அவை பெரிதும் உதவி செய்கின்றன. சத்தியத்தை நோக்கி வெகுவேகமாக அழைத்துப் போகின்றன. சத்தியத்தைத் தொட்டவர்க்கு மரணம் பற்றிய எந்த பயமும் இல்லை. மரணம் பற்றிய பயம் இல்லாதபோது, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நன்றாக அனுபவிக்க முடியும்.

வாழ்வை நன்றாக அனுபவித்த வர்க்கு உள்ளுக்குள் மிகப் பெரிய நிறைவு ஏற்படும். அந்த நிறைவுதான் சொர்க்கம். அந்த நிறைவுதான் கட வுளுக்கு அருகே கொண்டு வருகிறது. ஹோமமும், யாகமும், பக்தியும் யோகமும் மற்ற வித சடங்குகளும் எளிதில் கொடுக்காத ஒரு விஷயத்தைக் கொண்டு வந்து பகவான் ஸ்ரீரமண மகரிஷி நம் கைகளில் கொடுக்கிறார். நாம் தவறவிடாமல் எடுத்து அதை விழுங்கவேண்டும். ஒரு சிறு முயற்சி, அவரை நோக்கிய ஒரு பார்வை, நம்மை மிகப் பெரிய அளவில் மாற்றும்.



விசார மார்க்கம் எளிதானது. நான் யார் என்று என்னைத் திரும்பத் திரும்ப கவனமாய்ப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டும் என்னை உய்விக்கும்; என்னை கர்வம் அடையாமல் அமைதியாய் காக்கும். இதைத் தெரிந்துகொள்ளவே பல பிறவிகள் எடுத்திருக்கிறோம். அடுத்த பிறவிக்குப் போகாமல் இந்தப் பிறவியிலேயே இது என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நம் வாழ்வு சுழற்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும். உன்ன தமான நிலைக்குக் கொண்டு போய் உட்கார வைக்கும். சிவபெருமானே மனித உரு எடுத்து பகவான் ஸ்ரீரமண மகரிஷி யாக திருவண்ணாமலையில் திகழ்ந்தார் என்று சொல்லப்படுவது உண்டு. மிகக் கடுமையான அத்வைத தத்துவத்தை எளிதாக பகவான் ரமண மகரிஷியின் வாய்மொழியால் கேட்க, அது உண்மை என்று புலப்படுகிறது.

இந்தக் கட்டுரையை எழுத வாய்ப்பு அளித்த விகடன் குழுமத்துக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த கட்டுரைத் தொடரை எழுது வதற்கு பலமளித்த என் சற்குருநாதன் திருவண்ணாமலை மகான் யோகி ராம் சுரத்குமார் அவர்களை நான் பலமுறை நமஸ்கரித்து நன்றி சொல்லுகிறேன். நான் பகவான் ரமண மகரிஷியை நேரில் கண்டதில்லை. ஆனால் என் பதின்மூன்று வயதில், மஞ்சரியில் வெளியான 'ரமணரின் வாழ்வும் வாக்கும்’ என்ற புத்தகத்தை பைண்டு செய்து என் தாயார் எனக்குக் கொடுக்க, அதைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அன்று ஒன்றுமே விளங்காது போனாலும், அதன் பல வாக்கியங்கள் என் மனதில் இருக்கின்றன. பகவான் ஸ்ரீரமணர் மிகப் பெரியவர் என்கிற எண்ணம் அப்போதே எனக்குத் தோன்றியது.

எப்போது திருவண்ணாமலை போனாலும், பகவான் ரமண மகரிஷியின் இடத்தில் முன்னும் பின்னும் அலைவது என்பது எனக்குப் பிடித்த விஷயமாக இருக்கிறது. பகவான் ரமணரின் அன்புதான் எனக்கு

என் சற்குருநாதன் யோகி ராம்சுரத்குமாரையும் காட்டிக் கொடுத்தது. அவர் சந்நிதியில் உட்கார்ந்து, 'நீர் இருக்கும்போது நானில்லை; நானிருக்கும் காலத்தில் நீர் இல்லையே! எனக்கு யார் குரு? எங்கே என் குரு?’ என்று மனம் கரைந்து கேட்க, என் சத்குருநாதன் பகவான் யோகி ராம்சுரத்குமார் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என் குருவோடு நான் பின்னிப் பிணைய, ஸ்ரீரமணரே காரணம்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பற்றி எழுதிய பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். அவற்றை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து, சற்குரு ஸ்ரீரமண மகரிஷி சரிதமும் உபதேசமும் என்கிற ஸ்ரீரமணாச்ரமத்து புத்தகத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான், இதை என்னுடைய நடையில் எழுதினேன். அந்த புத்தகம் இல்லையெனில் இதை எழுதியிருக்க முடியாது.

ஒரு பிரபலமான பத்திரிகையில், இவரைப் பற்றி எளிதான முறையில் நான் எழுத, அவரைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்வதற்காக நீங்கள் ரமணாச்ரமம் போய் அங்குள்ள புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவீர்கள்; திரும்பத் திரும்பப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதைச் செய்திருக்

கிறேன். அப்படித் தொடர்ந்து படிக்கும்போது ஏதோ ஒரு கால கட்டத்தில், ஏதோ ஒரு முக்கியமான நேரத்தில், பகவான் ஸ்ரீரமணருடைய வாக்கியங்கள் உங்களுக்குள் மிகப் பெரிய மலர்ச்சியை ஏற்படுத்தும். அவர் சொல்வது என்ன என்பதை அவர் சொன்ன விதமாகவே உங்களுக்குப் புரியும். இந்த 'சரிதமும் உபதேசமும்’ என்பதை எட்டுப் பாகங்களாக, தடித்த புத்தகங்களாக ஸ்ரீரமணாச்ரமம் மிக அழகான முறையில் அச்சிட்டுத் தந்திருக்கிறது. அதை மொத்தமாக வாங்கி நீங்கள் படிக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

பகவான் ரமணரைப் புரிந்துகொள்வது என்பது மிக எளிதானது. புரிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையான தாபம் இருந்துவிட்டால் போதும், பகவான் ஸ்ரீரமணர் உங்களை ஆட்கொள்வார்.

ஏனெனில், இங்கு வேறு எந்தவிதமான நாடகத்துக்கும் அல்லது அலட்டலுக்கும் இடம் இல்லை.

அவற்றால் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாது. போலியான உபதேசிகளும் மோசமான மதவாதி களும் கீழ்த்தரமான மதமாச்சர்யங்களும் மிகுந்த இந்த உலகத்தில் சத்தியத்தைச் சொன்ன ஸ்ரீபகவான் ரமண மகரிஷிதான் நம்மைக் காப்பாற்ற முடியும். அவருடைய வாக்கியங்களே நமக்கு உண்மையை நோக்கி வெளிச்சம் தரும்.

என்ன வாழ்க்கை இது, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன், உண்மையில் நான் யார் என்ற தாபம் எவருக்கு எழும்பினும், அவருக்கு மிக எளிதாக விடை தரக்கூடிய ஒரே இடம் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. அவர் ஆஸ்ரமம். அவர் எழுதிய புத்தகங்கள். அவருடைய வாக்கியங்கள். அவருடைய அன்பர்களின் அனுபவங்கள்.

பகவான் ரமண மகரிஷி மதவாதியல்ல. ஆசார அனுஷ்டானங்கள் சொல்கிறவர் அல்ல. இந்தத் தேசத்துக்கு, இன்ன மொழிக்கு, இன்ன மதத்துக்கு உரிமையானவர் இல்லை. அவர் தனியாக எந்த ஒரு மதத்தையும் ஸ்தாபிக்கவில்லை. என்ன இருந்ததோ, அதை வெளிச்சம் போட்டுக் காட்டினார். எந்தவித வர்ணமும் சேர்க்காமல், எந்தவிதக் கலப்படமும் இல்லாமல், மிகத் தெளிவாக சத்தியத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல உங்களுக்குக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். அறிவதற்கு ஆவல் இருந்தால் போதும். மற்றவை அவரது அருளால் ஏற்படும்.

பகவான் ஸ்ரீரமண மகரிஷி திருவடிகளே சரணம்.

Comments